ஏப்ரல் 19, 2024
“சார், கைய விடுங்க”.. நடுவானில் அலறிய விமானப் பணிப்பெண்.. விடாமல் “சில்மிஷம்”.. இந்த வயசுல இது தேவையா?

“சார், கைய விடுங்க”.. நடுவானில் அலறிய விமானப் பணிப்பெண்.. விடாமல் “சில்மிஷம்”.. இந்த வயசுல இது தேவையா?

விமானப் பணிப்பெண்ணின் கையை பிடித்து இழுத்த முதியவர், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடலின் மீது கை வைக்க தொடங்கினார்.

மும்பை: விமானத்தில் சமீபகாலமாக நடைபெறும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கின்றன. விமானப் பயணமே இனி வேண்டாம் என நினைக்கும் அளவுக்கு படுமோசமான செயல்கள் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் இண்டிகோ விமானத்தில் நடந்திருக்கிறது. நடுவானில் விமானப் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்து சிக்கியிருக்கிறார் 63 வயது முதியவர்.

விமானத்தில் இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இத்தகைய சம்பவங்கள் குறையும் என பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள்.

சிறுநீர் கழித்து அட்டூழியம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் நடந்த சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு அன்றைய தினம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா (34) என்பவரும் பயணித்தார். அளவுக்கு அதிகமான போதையில் சிறு சிறு சேட்டைகளை செய்து வந்த அந்த நபர், ஒருகட்டத்தில் தனக்கு அருகே இருந்த சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த பிறகும், தனது மர்ம உறுப்பை காட்டியபடி அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். பின்னர் சக பயணிகள் தட்டிக்கேட்டதை அடுத்து, அவர் அங்கிருந்து நகன்றார். இதுதொடர்பான புகாரின் பேரில் சங்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்க நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த அவர் பணிநீக்கமும் செய்யப்பட்டார்.

தொடரும் சேட்டைகள்..
இதுபோல அடுத்தடுத்து விமானத்தில் பயணிகள் குறும்பு செய்வது அதிகரித்து வந்தது. பறக்கும் விமானத்தில் புகைப்பிடிப்பது, எமஜர்ஜென்ஸி கதவை திறப்பது என மிகவும் அநாகரீகமான, ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, அந்த விமானத்தில் நடந்ததை போலவே கர்நாடகாவில் ஒரு பேருந்தில் இப்படியொரு அருவருப்பான சம்பவம் நடந்தது. கர்நாடகா அரசு பேருந்தில் கடந்த ஜனவரி மாதம் இளம்பெண் ஒருவர் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ஸ்லீப்பர் வசதி கொண்ட அந்த பேருந்தில் அந்த மாணவிக்கு மேலே உள்ள படுக்கையில் இருந்த ஒரு இளைஞர், நன்றாக மது அருந்திவிட்டு அந்த மாணவியின் முகத்திலேயே சிறுநீர் கழித்தார். இதனால் அந்த மாணவி அலறவே, சக பயணிகள் அவரை செமத்தியாக கவனித்து போலீஸில் ஒப்படைத்தனர். அதேபோல, கடந்த கொல்கத்தாவில் ரயிலில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது டிக்கெட் பரிசோதகரே சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இண்டிகோ விமானத்தில்..

இந்நிலையில்தான், இண்டிகோ விமானத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து மும்பையை நோக்கி இண்டிகோ (6E-1052) விமானம் வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் புறப்பட்டது முதலாக, அதில் பயணித்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த க்ளாஸ் எரிக் ஹரால்டு (63) என்ற முதியவர் மது அருந்திக் கொண்டே வந்துள்ளார். ஒருகட்டத்தில் போதை தலைக்கேறிய அவர், விமானப் பணிப்பெண்ணை அழைத்து தனக்கு உணவு கொண்டு வருமாறு அதட்டலாக கூறினார். விமானப் பணிப்பெண்ணும் எதுவும் சொல்லாமல் அவருக்கு சிக்கன், மட்டன் உணவுகளை கொண்டு வந்து பரிமாறினார். அப்போது க்ளாஸ் எரிக், தனக்கு வறுத்த மீன்கள் வேண்டும் எனக் கேட்க, அவை இப்போது இல்லை என பணிப்பெண் கூறியிருக்கிறார்.

சில்மிஷம்.. கைது..

இதனால் ஆத்திரமடைந்த க்ளாஸ் எரிக், அந்த விமானப் பணிப்பெண்ணை கெட்ட வார்தைகளால் திட்டியுள்ளார். பின்னர்தான் தனது சில்மிஷ வேலைகளை அவர் ஆரம்பித்தார். அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுத்த அவர், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடலின் மீது கை வைக்க தொடங்கினார். அந்தப் பெண் எவ்வளவு எச்சரித்தும் முதியவர் சில்மிஷத்தை தொடரவே, அவர் அங்கிருந்து சென்று விமானியிடம் இதை தெரிவித்தார். இதையடுத்து, அங்கு வந்த விமானக் குழுவினர் அவரை அமைதியாக ஒரு இடத்தில் அமர வைத்தனர். பின்னர், மும்பை வந்ததும் அவரை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.